Saturday, September 17, 2011

மகளே மகிழ்ச்சி

மகளே
மகிழ்ச்சி

தொலைவிலிருந்து
தொலைபேசியில்
விவரம் அறிந்தேன்

காலத்தின் கோலம்
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருகிறது
உச்சி முகர்ந்து
தனியே அமர்த்தி
உற்றார் உறவினருக்கு
அழைப்பு விடுத்து
ஆசீர்வதிக்க
நான் பக்கத்தில் இல்லை

இப்போது நானும்
உறவினரை வந்து
எட்டிப் பார்த்து
ஓடிவிடும்
சூழ்நிலையில் ..

வரும் காலம்
ஒளிமயமாய் இருக்க
நிகழ் கால
சந்தோஷங்களை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

கண்மணியே
உனக்கொரு அறிவுரை

நீ உடலளவில் மட்டுமே
பக்குவமடைந்திருகிறாய்
மனதளவில் இல்லை
மெய் சிலிர்க்கும் பேச்சுகளும்
புண் முறுவல் வார்த்தைகளும்
அறுவருக்கும் தீண்டல்களும்
அன்பான கெஞ்சல்களும்
அம்புப் போல் தாக்கும்
அது அனைத்தும்
முகச் சாயங்களே
அன்றி உண்மை இல்லை

உன்னை முதலில் நேசி
நீயே உனக்குத் தோழி

புத்தகம் வாசிக்க
கற்றுக் கொள்

நெஞ்சில் உரமும்
கண்களில் கனலும்
இருக்கட்டும்

வாழ்வில் நெறியும்
வார்த்தையில் கடுமை
இருக்கட்டும்

மஞ்சள் நீராட்ட
ஆசை தான்
வேறு வழி இல்லை
என் கண்ணீரால்
உன் மனதை
நீராட்டுகிறேன் .

No comments:

Post a Comment